மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது. எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபித்திருக்க வேண்டும். அது ஜனநாயக கடமை. அந்த கடமையை நிறைவேற்ற அவர் தவறினார். நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியாவது அவர் பெரும்பான்மையை நிருபித்திருக்கலாம் அதனையும் அவர் செய்யவில்லை. பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதுடன், அமைச்சரவை புதிதாக பலர் நியமிக்கப்பட்டனர். சிலர் எம்.பிக்கள் விலை போனார்கள். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டும் மைந்தவால் 113 உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் போனது.

இவ்வாறான செயற்பாடுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, குரல் வாக்கெடுப்பின் மூலமாக (ஆம்ஃஇல்லை) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 128பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் ஆற்றிய உரைக்கு எதிராகவும், அவருக்கு எதிராகவும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, சபாநாயகரை சபைக்கு வரவிடாது அவரது கதிரை மற்றும் அதனைச் சுற்றி மஹிந்த அணியினர் கூடி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது தாமதமாக பாதுகாப்புடன் வந்து தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

மஹிந்த மீதும், அவர் தலைமையிலான அரசாங்கம் மீதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தீர்மானத்துக்கமைய மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இராஜிநாமா செய்ய வேண்டும். பதவி வகிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

அத்துடன், அமைச்சுகளில் அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களும் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு பதவி வகிப்பது தவறு.

தொடர்ந்தும் பதவி வகித்தால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவர் பிரதமராகவோ அரசாங்கத்தை ஆளவோ முடியாது. இது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான செயற்பாடாகும் என்றார்.

மேலும், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவிநீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ் சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.