யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேரந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது.

குறித்த படகானது அன்ரன் சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதுடன், அப்படகினை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவந்த நிலையில், இவ்வாறு படகு எரியூட்டப்பட்டமையால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலையுடன் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பும் கேரதீவு இறங்குதுறையில் வைத்து 3 படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டதாகவும், மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவரிற்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் நவாந்துறை மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.