ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை ஒன்றை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம், ரயில்களில் யாசகம் பெறுவதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. பார்வையற்றவர்கள் போன்று பிரயாணிகளை ஏமாற்றி யாசகம் பெறுபவர்களைக் கைது செய்துள்ளதாகவும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.