கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வில் சன நெரிசலில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் நடைபெற்று வந்த ஏகாதச ருத்ர வேள்வியின் இறுதி நாள் நிகழ்வில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். உலக நன்மைக்காகவும் நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானம் நிலவவும் மேற்படி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் இறுதி தினம் என்ற காரணத்தினால் நாட்டின் பல பாகங்களிலும இருந்து இலட்சக்கணக்கான அடியார்கள் பங்குகொண்டிருந்தனர். பூஜைகள் நிறைவுபெற்று அடியார்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட ருத்திராக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனைப் பெறுவதற்கு பெரும் சன நெருக்கடியேற்பட்டது. இதன்போது 14 பேர் காயமடைந்த நிலையில் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவிகள் வழங்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.