கொழும்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், 8 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 அதிகாரிகளும் கேகாலை சிறைச்சாலைக்கு இணையாக கடமையாற்றுபவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைக் காவலர், சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி கேகாலை சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக சிறைச்சாலை பஸ் வண்டி மூலம் கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டப் போதே போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிறைச்சாலைகள் தலைமையகத்தின் உதவி சிறைச்சாலை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டதுடன், குறித்த அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கமைய இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.