தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய உரையாடல்களின் போதும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை, ஆனால், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளராகத் தான் இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், அது பற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும் என்றும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் தற்போதைய உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.