முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

10 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு முறையிலும் இது தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு தடையேற்படுத்த வேண்டாம் என்றும், தனது பதவியைப் பயன்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் என்றும் குறிப்பாக லெப்டினன் கமாண்டர் கலகமகே லக்சிறி என்ற அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டாமெனவும் நீதவான் ரவீந்திரவுக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அறிவிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறும் பிணையின் நிபந்தனைகளை மீறினால் பிணை நிபந்தனைகளை இரத்து செய்துவிட்டு மீண்டும் விளக்கமறியலில் வைப்பதாக நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக, கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.