வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரினால் குறித்த வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.

இருப்பினும் குமுதினி விக்கிரமசிங்க இன்று வழக்கு விசாரணைக்கு கலந்து கொள்ளாததால் குறித்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 31ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி ஜனக் டி சில்வா உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி. டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். அதன்படி பி. டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்று விசாரணைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.