முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைத்துரைப்பற்று ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பண்டாரவன்னி பகுதியிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கேப்பாபிலவு – பிரம்படி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வில்பத்து- மன்னார் வீதியில் வெள்ளநீர் பாய்ந்தோடுவதால், அங்கு சிக்குண்டிருந்த பஸ் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸிலிருந்த சுமார் 70 க்கும் அதிகமானோர் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.