மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளையடுத்து, தெகிவளையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை கல்கிஸை நீதவான் முன்னிலையில் நாளை (27) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.இதேவேளை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியமை போன்ற காரணங்களுக்காக, மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.