பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகத்திறமை அற்ற வட மாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வட பிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றதாகவும், ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய தம்மால் எழுத்துமூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்துள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினாலும், வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் இதுவரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் இன்றுவரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வடபிராந்திய முகாமையாளரினை வடக்கில் இருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.

மன்னார் உட்பட வடக்கில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மன்னார் மாவட்டத்தில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்குச் செல்வோர் உட்பட அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

குறிப்பாக பருவகால சீட்டுடன் பயணங்களை மேற்கொள்ள வந்த மாணவர்கள், திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். மன்னார் சாலைக்குச் சொந்தமான பேரூந்துகள் நேற்று இரவு தங்கி நின்ற கிராமம் மற்றும் மாவட்டங்களில் இருந்து மன்னார் சாலைக்கு வந்தது.

குறித்த பேரூந்துகளில் மன்னார் சாலைக்கு வருகை தந்த மக்கள் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். எனினும் மக்கள் தனியார் போக்குவரத்து சபையின் பேரூந்துகள் மூலம் தமது பயணங்களை மேற்கொண்டனர்.