சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம், அசௌகரியங்களைக் குறைப்பதற்கான நடவடிக்ககைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விசேட கூட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்ககையில், ‘தற்போது எமது சர்வதேச விமான நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் முதன்மையானதாகவும் உள்ள பிரச்சினையானது பயணிகளது குடிவரவின் போது ஏற்படும் நெரிசல் மற்றும் காலதாமதமாகும்.‘குறிப்பாக, ஒரு சில சந்தர்ப்பங்களில் குடிவரவின் போது, ஒரு மணித்தியாலத்தில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பயணிகள் விமான நிலையத்தில் தரையிரங்குகின்றனர். இதன்போது, விமான நிலையத்தில், பயணிகள் நெருக்கடி உள்ளிட்ட பல அசௌகரியங்களை எதிர்நோக்கின்றனர். ‘ஆகவே, இதனைக் குறைப்பதற்கும் சிறந்த சேவையை வழங்குவதற்குமான புதிய தீர்வை நாம் முன்வைக்கவுள்ளோம்.

எனினும், இதற்கு நீண்டகால தீர்வொன்று மிகவும் அவசியமாகும்’ என்றார். இக்கூட்டத்தில், விமான நிலைய சேவையை குறுகியகால அடிப்படையிலும் நீண்ட கால அடிப்படையிலும் எவ்வாறு முன்னேற்றுவது என்பது பற்றிய ஆலோசனைகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள், அமைச்சோடு தொடர்புடைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.