யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

படையினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கும் நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோது யாழ் மாவட்ட இராணுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சி விடுவிக்கப்பட்ட காணிக்கான பத்திரத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகத்திடம் கையளித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பரிவிலுள்ள காணிகளே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் காணி உரிமையாளர்கள், இராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நீண்டகாலமாக படையினர் ஆக்கிரமிப்பில் இருந்த இக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இதற்கமைய படிப்படியாக காணிகளும் விடுவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலையே இன்று மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.