மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கையானது சட்டபூர்வமாக இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் புளோரிடாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போது சட்ட ரீதியாக கடந்த நாட்களில் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று குறித்த அறிக்கையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடக்கப்பெற்றுள்ளது. அதே நேரத்தில் குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களியும் என்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையினை மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் குறித்த மனித புதை குழியின் அகழ்வு பணிகளை தொடர்சியாக மேற்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக நீதவான் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.