மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிர டி ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் அவர்கள் சார்பில் எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அதன்படி மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிமன்றம் அன்றைய தினம் பிரதிவாதிகளை ஆஜராக நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டது. எல்லை நிர்ணயம் என்று கூறிக்கொண்டு தேர்தலை தற்போதைய அரசாங்க பிற்போடுவதாகவும் இதனால் 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன், மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.