வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சம்பவ நேரம் தந்தையும் மகளும் இருந்துள்ளார்கள். மகள் உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். தந்தையாரும் உணவருந்தி விட்டு வீட்டில் நின்றுள்ளார். நித்திரை விட்டு எழுந்த மகள் தந்தையை தேடிய போது வீட்டின் முன் வாயில் பகுதியில் உள்ள தண்ணீர் பம்பி அருகில் தந்தையார் விழுந்து கிடந்ததை அவதானித்துள்ளார். இதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தந்தையை எழுப்ப முயன்ற போது அவரது நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்கள் காணப்பட்டமையும், மரணித்து இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிசார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தில் காயங்கள் காணப்பட்டமையால் உடனடியாக வவுனியா தடயவியல் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து வருகைதந்த தடயவியல் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மரணமடைந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த செ.சிவராஜா (வயது 64) என்பவராவார். அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.