வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது பாதுகாப்பு படையினர் வசம் 13,497 ஏக்கர் விஸ்தீரனமான காணியே உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழப்பு அபிவித்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுமார் 84 ஆயிரத்து 675 ஏக்கர் நிலம் அரச பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளின் காரணமாக தாமதமாக இடம்பெற்றுவந்த காணிவிடுவிப்பு நடவடிக்கை, 2015 ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் துரிதமாக்கப்பட்டது. இதற்கமைய, 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை பாதுகாப்பு படைகள் வசமிருந்த 84 ஆயிரத்து 675 ஏக்கர்களில் 71 ஆயிரத்து 178 ஏக்கர காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து அந்த மாகாணங்களின் ஆளுநர்கள், படைத்தரப்புக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பினால் இதுவரை 6,951 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்பட இருக்கின்றன.

தற்போது அரச படைகள் வசம் 13,497 ஏக்கர் நிலம் இருந்து வருவதுடன், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகளாகும். அவற்றில் கோரியிருக்கும் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் மேலும் 475 ஏக்கர் காணிகளை எதிர்வரும் காலங்களில் விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த நிலங்களில் அரசுக்கு சொந்தமான 81 சதவீத நிலங்களும் தனியாருக்கு சொந்தமான 90 சதவீத நிலங்களும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.