வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில், 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறது. இதற்கமைய, முதற்கட்டமாக நிறைவுசெய்யப்படவுள்ள 4,750 வீடுகளில், யாழ்ப்பாண்த்தில் 1500 வீடுகளும் கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமவையில் 400 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் கட்டமான எஞ்சிய 5,250 வீடுகளுக்கான 10 பில்லியன் நிதி அமைச்சினால் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்படும் என தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

பயனாளிகள் தெரிவின்போது நலன்புரி நிலையங்களிளும் உறவினர்களுடன் வாழும் உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், தாயகம் திரும்பும் ஏதிலிகள், பெண்களின் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் காணமல்போனவர்களை கொண்ட குடும்பங்கள், சமூகமயமாக்கப்பட் முன்னாள் போராளிகள், அவர்களின் குடும்பங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.