பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் ஷேக் சோனியா குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலிலும் குண்டு வெடித்தது. அப்போது ஹோட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் ஜயான் சவுத்ரி குண்டுவெடிப்பில் சிக்கினர்.

இதில், மஷியுல் ஹக்யு சவுத்ரி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் ஜயான் சவுத்ரி உயிரிழந்து விட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜயான் சவுத்ரியின் உடல் நேற்று பங்களாதேஷ் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மாலைமலர்)