ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமன கடிதத்தைப் பெற்றார்.

இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.