கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும், 16 நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலா செல்வது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவித்துள்ளது. அத்துடன் நோர்வே, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. மேலும் தேவையான காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குச் செல்லுமாறு, அவுஸ்திரேலியாவும், ரஸ்யாவும் எச்சரித்துள்ள நிலையில், நெதர்லாந்தும் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு சுற்றுலா செல்ல வேண்டாமென பல்கேரியாவும் அறிவுறுத்தியுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியமும் சீனாவும் தமது நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளன.

சுவீடன், கனடா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாமென தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தவிர ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் எதுவும் இதுவரை தமது பிரஜைகளுக்கு எவ்வித அறிவுறுத்தல்களையோ, பயண எச்சரிக்கையையோ விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.