மே மாதம் முதலாம் நாள் தொழிலாளர் வர்க்கத்தின் காத்திரமான போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை குறிக்கும் நாள். ஆனால் இப்போது தொழிலாளர்கள் தமது வெற்றிக்காக போராடும் நாளாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்டது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவு, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு துருவ உலக ஒழுங்கு, உலக தாராளமயமாக்கல், தேசிய இனங்களின் எழுச்சி என்று நாம் கண்ட அனைத்து விடயங்களுமே, தொழிலாளர்கள் என்றொரு வர்க்கத்தினர் உலகம் பூராவும் நலிவடைந்து, பிளவுபட்டு, தனித்துவங்களை இழக்க காரணமாகி விட்டதை உணர்கின்றோம்.

தேசிய இனசிக்கலில் தொழிலாளர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மட்டுமன்றி அவர்களது ஒற்றுமையும், அமைப்பு ரீதியான செயற்பாடுகளும்கூட காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இனரீதியாக, மதரீதியாக, பிரதேச ரீதியாக பிரித்து வைக்கப்பட்டு விட்டனர். தனது நலன்களை தேவைகளை முதலில் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்ற மனநிலைக்குள் புகுத்தப்பட்டுள்ளனர். தேசிய இனகுழுக்களின் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உள்ளுர்த் தலைவர்கள் என்று சகலருமே இதற்கு பொறுப்பாளிகள்தான்.எமது நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் மோசமான நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதொன்றல்ல. இலங்கைத்தீவுக்கு ஆட்சிமாற்றம் கிடைத்தவுடனேயே இங்குள்ள தேசிய அரசியல் தலைமைகள் செய்த மிகப்பெரிய கைங்கரியம், இந்நாட்டில் பிரதான தொழிலாளர் வர்க்கமாக திகழ்ந்த மலையக தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியமைதான். அன்றிலிருந்து இன்றுவரை, அந்தமக்கள், இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கு சமனான உரிமைகளுடன் வாழ கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

வர்க்கரீதியான போராட்டங்கள் வெற்றிபெறும்போது அனைத்து விதமான சமூக ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைகள், இனமுரண்பாடுகள், கலாச்சார சீரழிப்புக்களும் முற்றுப்பெற்றுவிடும் என்று எண்ணியிருந்த காலம் மாறி, தேசிய இன சிக்கலுக்கு நியாயமுறையில் விடை காண்பதன்மூலமே வடகிழக்கு பிரதேசத்தில் வாழும் தொழிலாளர் வர்க்கத்தினரின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விடிவைத்தேடும் நடவடிக்கைகளிற்கு முதலடி எடுத்து வைக்கப்படமுடியும் என்று உறுதியாக நம்பக்கூடிய அளவிலேயே தமிழ்பேசும் மக்கள், குறிப்பாக தமிழினம் இலங்கையில் அவல வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இன, மத, வர்க்க முரண்பாடுகளை தந்திரமாக கையாண்டு அனைத்து உழைக்கும் மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தை கைவிட்டு இலங்கை வாழ் அனைத்து சமூகங்களும் சம உரிமைகளுடன் ஐக்கியமாக வாழ்வதற்கான அரசியல் உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். முறையான, அர்த்தபுஷ்டியுள்ள, அனைத்து சமூக மக்களும் ஏற்கக்கூடிய அதிகார பரவலாக்கமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக அமையுமென்பதை மீண்டுமொருமுறை இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு புளொட் விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.