முஸ்லிம்களின் அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல, ஆகவே முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டும், மீண்டும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இந்நாட்டில் மதவாத மோதல்களை உருவாக்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எவ்வாறான பிரிவினைவாதம், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட எமது புலனாய்வு துறையின் தகவல்களை கருத்தில் கொள்ளாது நிலைமைகளை கருத்தில் கொள்ளாது ஒரு சிலரது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை கையாண்ட காரணத்தினால் தான் இலங்கையில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சஹறான் என்ற நபர் இன்று அல்ல கடந்த 2014 ஆம் ஆண்டே தடுக்கப்பட வேண்டிய ஒரு நபராவார். அதேபோல் எதிர்காலத்தில் உருவாக்கவிருக்கும் பயங்கரவாத சாத்தான்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதில் பிரதான கடமை முஸ்லிம் மக்களிடம் உள்ளது. எந்த அச்சமும் இல்லாது முன்வரவேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் அடிப்டைவாதிகளை எமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.