பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டய, வென்னவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்ன என்ற நபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட மனித படுகொலைகள் மற்றும் காயமேற்பட்ட சம்பவத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.