தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்காதிருப்பதற்கு ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள அப்துல் மஹீட் மொஹமட் நியாஸ் என்ற சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வதற்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார்.கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்துல் மஜீட் மொஹமட் நியாஸ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கோரி இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் ​சேர்ந்த 26 வயதுடைய மொஹமட் சிபான் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், 05 இலட்சம் ரூபா பணத்தை ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.

05 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க இணக்கம் தெரிவித்து இரண்டரை இலட்சம் ரூபாவை முற்பணமாக கொடுக்க முயற்சிக்கும் போது இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.