யாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாடசாலைக்கு அருகிலுள்ள ஒழுங்கைக்கு அருகில் ஆசிரியையை வழிமறித்த இருவர் ‘மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு செல்லாது ஒழுங்கைக்குள் நிற்கிறார்கள்’ என கூறியுள்ளனர்.
அதனை அடுத்து ஆசிரியை குறித்த ஒழுங்கைக்குள் சென்ற சமயம் பின் தொடர்ந்த இருவர் ஆசிரியையின் முதுகு பகுதியில் கத்தியால் குத்தியதுடன் அவரின் சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளனர். அதன்போது சுதாகரித்த ஆசிரியை அபாய குரல் எழுப்பியதுடன் ஒழுங்கைக்குள் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடியுள்ளார்.

அதனை அடுத்து தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.