முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15.05.2019 ம் திகதி முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலகரை கொக்குளாயைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளதுடன் அவரின் உந்துருளியின் சாவியை பறித்துக் கொண்டு அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். இந்நிலையில் அன்றே இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 19ஆம் திகதிவரை முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் கிராம சேவகர்களின் அழுத்தம் காரணமாக கிராமசேவகருக்கு இடையூறு அச்சுறுத்தல் விட்ட குறித்த பெரும்பான்மை இன இளைஞரை நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளார்கள்.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களை அழைத்த முல்லைத்தீவு பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவேளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கிராம அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட குறித்த பெரும்பான்மை இன இளைஞரை விடுவிக்கக்கோரி நேற்று கொக்குளாய் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கதைத்துள்ளார்கள்.

இருந்தும் பொலிஸார் அரச உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்ததன் காரணத்தால் கைதுசெய்யப்பட்ட நபரை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள். அரச உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த நபரை எதிர்வரும் 03.06.2019ஆம் திகதி வரை விளக்கமறியவில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொக்குளாய் முகத்துவராப்பகுதியில் குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாகவே அங்கு தமிழ் மக்கள் குடியேற இன்றும் அச்சப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் அரச உத்தியோகத்தர் ஒருவரையே அச்சுறுத்தும் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் சாதாரண தமிழ்மக்கள் எவ்வாறு வாழ்வது என கொக்குளாய் பகுதியினை சேர்ந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.