பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்தபோது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை புத்தளம் வான்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் வாள்களும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வான்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 4 வாள்களும், குழல் 12 ரக துப்பாக்கி ரவைகளும் , மற்றும் வேறு சில பொருட்களும் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட சோதனை நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு யாராவது இவற்றை குளத்தில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.