கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர்.

கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.தமது சொந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களின் பின்னர் மீள்குடியேறிய தமக்கு இதுவரை தற்காலிக வீடுகளையோ அல்லது மலசலகூட வசதிகளையோ ஏற்படுத்தித்தரவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே தமக்கு தற்காலிக வீடுகளையேனும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மேற்படி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.