இந்தியாவின் இரண்டாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்றார். புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதாவின் எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் 30 ஆம் திகதி (இன்று) புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பிரதமரின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன் போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பல உள்நாட்டு அரசியல் தலைவர்ளும் பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.