குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபியின் வீடு, பாதுகாப்பு தரப்பினரால் நேற்று சோதனையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம்- கலாவௌ பிரதேசத்தில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போதும், அங்கிருந்து சந்தேகத்துக்கிடமான எவ்வித பொருள்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைத்தியரின் தந்தை, நெருங்கிய உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேவேளை வைத்தியர் ஷாபி 4000 தாய்மாருக்கு கருத்தடை செய்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், நேற்றுவரை 200 முறைபாடுகள் குருநாகல் போதனா வைத்தியசாலை, தம்புளை ஆதார வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், பேராதனை போதனா வைத்தியசாலைக்கும் இவ்விடயம் தொடர்பில் பலர் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறைபாடுகள் கிடைத்தால், ஏற்றுக்கொள்வோம் என பேராதனை வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.