உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் என்ற நபர் தங்களது சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச காவல்துறையான இண்டர்போல் தெரிவித்துள்ளது.  இண்டர்போல் இணைத்தளத்தில் அதன் செயலாளர் நாயகம் ஜுகன் ஸ்டொக்கால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மொஹமட் மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் நான்கு பேர் சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யபபட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இண்டர்போல் இணைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இண்டர்போல் பெருமிதம் அடைவதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் சட்டத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தல் விடுப்பது ஒரு பலம்வாய்ந்த செயலாக இருப்பதாகவும் இண்டர்போல செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான ஸஹ்ரான் ஹாஷிமுக்கு மிக நெருக்கமானவராக 29 வயதுடைய அறியப்படுகிறார்.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் நான்கு பேர் சவுதியின் ஜித்தாவில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.