இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கப்படும் சில சாட்சிகளை இரகசியமான முறையில் பதிவு செய்ய விசேடத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

சில சாட்சியாளர்களின் பதிவுகளை ஊடகங்கள் இல்லாமல் பதிவு செய்யவும் சில சாட்சியாளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற, விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களிடையேயான கலந்துரையாடலின் போது, இவ்வாறானத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய, பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சாட்சியாளர்களாக அழைக்கப்படும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜூலை மாதத்துக்கு முன்பு விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறைவு செய்வது தொடர்பிலும் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.