ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் காரணமான, சிறிய மற்றும் மத்தியதர தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட பொருளாதார நட்டம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான கணக்கெடுப்பொன்றை நடத்த, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத்துறைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மதிப்பீடானது, மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதென, திணைக்களம் அறிவித்துள்ளது.2018 ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதி மற்றும் 2019 ஜனவதி முதல் மே 31ஆம் திகதி வரையான மாதங்களில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் வருமானம் பற்றி, இதன்போது கண்டறியப்படவுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறுதினம் தாக்குதல்களால் சேதமடைந்த நிறுவனங்கள், கட்டடங்கள், வாகனங்கள், சொத்துக்கள் தொடர்பிலும், தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.

அத்துடன், தாக்குதல்களின் பின்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் சேவை (10 ஊழியர்களிலும் குறைவான) நிறுவனங்கள், ​பயணிகள் போக்குவரத்துகள், பொருள்களின் போக்குவரத்து, வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும் தொழிற்றுறைகள், கடற்றொழில் நடவடிக்கைகள் போன்றன குறித்து, இதன்போது தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.