த.வினோயித்

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா?

என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இல்லத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இதன்போது மேலும் கூறுகையில்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். தமிழ் சமூகத்தில் மாமா என்ற உறவுக்கு ஒரு அந்தஸ்த்து இருக்கின்றது. மரியாதை இருக்கின்றது. அதை சுட்டித்தான் கூறினாரா? அல்லது வேறு அர்த்தத்தில் கூறினாரா? என்பது தொடர்பாக எனக்கு தெரியவில்லை.

உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே சரியாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம்.

ஒரு அரசியல் தரப்பாக, மக்களுடைய ஆணையை பெற்ற தரப்பாக எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. அந்தவகையில் நாங்கள் பேசுகிறோம், பேசிக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு பேசாமல் இருக்க முடியாது. அந்த பேச்சுக்களில் அரசு கூறும் விடயங்களை நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். அது நடக்காதவிடத்து அதற்கான ஒட்டுமொத்த பொறுப்பும் எங்களுடைய தலையில் சுமத்தப்படாது. இந்த வேலையை எந்த அரசியல் தரப்பும், மக்கள் ஆணையை பெற்ற எந்த தரப்பும் செய்யும், செய்ய வேண்டும்.

கம்பரெலிய திட்டம் எமக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது தென்னிலங்கை மக்களை கவருவதற்காக அரசு உருவாக்கிய திட்டம். அதில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கிறார்கள். அதை வேண்டாம் என சொல்ல முடியுமா? உண்மையில் இந்த திட்டத்தின் ஊடாக, எங்களுடைய பகுதிகளில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலிருந்த வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளை முன்னேற்றுவதில் எங்களால் முடிந்த பங்கை நாங்கள் செய்திருக்கிறோம். வாக்கு கிடைக்கும், கிடைக்காது என்பது வேறு கதை.

ஆனால் எமக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. மேலும் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வேண்டும். அதற்காக இவ்வாறான சின்னச் சின்ன உதவி திட்டங்கள் வேண்டாம் என அவர்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு அது தேவை இல்லை என்றால் மக்கள் அதனை எதிர்த்திருப்பார்கள்.

மேலும் கம்பரெலிய திட்டம் தொடர்பாகவும் எங்களை குறித்தும் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை பெற்று தங்களுடைய பிரதேச மக்களுக்கு கொடுக்கிறார்கள். குறிப்பாக பாhராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக கொடுக்கப்பட்ட 50 மில்லியன் ரூபா நிதியிலிருந்து தமக்கு தேவையானதை பெற்று மக்களுக்கு கொடுத்திருக்கின்றார். நாங்களும் கொடுத்திருக்கின்றோம். ஒருவேளை நாங்கள் இதனை பெறாமல் விட்டிருந்தாலும் கொடுத்ததையே இவர்களுக்கு வேண்ட தெரியாது என்று எங்களை விமர்சித்திருப்பார்கள்.

சமஸ்டியை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் கேட்கவில்லை. சுமார் 70 வருடங்களாக கேட்டார்கள். இப்போதும் கேட்கிறார்கள். அதற்காக வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் சமஸ்டி கிடைக்கும் வரை அப்படியே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.

அல்லது எங்களுக்கு சமுர்த்தி தேவையில்லை என்பதற்காக சமஸ்டி கிடைக்கும்வரை பாவப்பட்ட மக்களுக்கு சமுர்த்தி கிடைக்கக்கூடாது என்றும் அவசியமில்லை என்றார்.
(நன்றி யாழ். தினக்குரல் 27.06.2019)