தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று (16.07.2019) செவ்வாய்க்கிழமை மாலை 4.30அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான கனகரட்ணம் சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. 30ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாளின் ஆரம்ப நிகழ்வாக கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்ததோடு, நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி, மலர் அஞ்சலி என்பன இடம்பெற்று அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உபதலைவர்கள் ஜி.ரி. லிங்கநாதன், பொ.செல்லத்துரை, நிர்வாக பொறுப்பாளர் ம.பத்மநாதன், தேசிய அமைப்பாளர் க.தவராஜா, கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்வின் இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.