முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உதயம் நகர் மாதிரி கிராமத்திற்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையிலே நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கபடுகின்ற மாதிரி கிராமங்கள் வரிசையிலே 223 ஆவது மற்றும் 224 மாதிரி கிராமங்களான உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் கிராமங்களின் வீடுகளை மக்களிடம் இன்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மக்களிடம் கையளித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ஒவ்வொரு வீடுகளாக நாடாவை வெட்டி மக்களுடைய வீடுகளை திறந்துவைத்து மக்களுடன் அன்பாக கலந்துரையாடினார். இன்று காலை 10.30 மணிக்கு இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றதோடு பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் வீடமைப்பு கடன்கள் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .