முல்லைத்தீவில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் கூறியுள்ளனர். கடத்தப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டிற்கமைய, வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ச.நாகேந்திரன் என்பவர் முல்லைத்தீவில் வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜ.பி. கங்காநாத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர் குழுவினர் விசாரணை நடத்தி தேடுதல் மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர். கடந்த 01ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு பகுதியில், புலிகளின் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை தோண்டி எடுக்க வருமாறு அழைத்து சிறிய ரக வாகனம் ஒன்றில் கடத்தி, முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடு ஒன்றில் அடைத்து வைத்து பின் யாழ். சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றில் அடைத்து வைத்து கடத்தப்பட்டவரின் மனைவிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி 01ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பிரான்சில் வசித்துவரும் யாழ் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் சிவறஞ்சிதன் என்பவரின் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இந்த ஆட்கடத்தல் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது.

சாவகச்சேரி, மன்னார், வவுனியா பகுதிகளைச் சேர்ந்தவர்களே இக்கடத்தலில் ஈடுபட்;டமை விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து 03 ஆம் திகதி சாவகச்சேரி சென்ற முல்லைத்தீவு பெருங்குற்றப்பிரிவு பொலிஸார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.

இதன்போது அவர்களை கடந்த 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்திருந்தார். 08ஆம் திகதி மீண்டும் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை பொலிஸார் தேடி வருவதாக கூறப்படுகிறது.