கடந்த நான்காம் திகதி புளொட் அமைப்பு சார்பில், மறைந்த கழக செயலதிபர் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள் நினைவாக சுவிஸில் வீரமக்கள் தினம் அனுட்டிக்கப்பட்டது.

கிளிநொச்சி சக்தி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களும், உறவுகள் இல்லாத பிள்ளைகளும், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த பிள்ளைகள் என பலதரப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த 32 பெண் பிள்ளைகளும் 4 சிறுவர்களும் இல்லத்தில் தங்கியுள்ளனர். குறிப்பாக யுத்தம் நடந்த பிரதேசத்தை சேர்ந்த பிள்ளைகளே இங்கு உள்ளனர். இந்தப் பிள்ளைகள் உழைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தயாராகவே உள்ளனர். இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட விருப்பம் கொண்டாலும், தண்ணீர் மோட்டார் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன் இவர்களின் நாளாந்த உணவு உட்பட பல்வேறு தேவைகளுக்கு சிரமத்தை எதிர் நோக்கியுள்ள இந்தப் பிள்ளைகளின் உணவுத் தேவை பற்றி அவர்களால் முன்னர் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

சுவிஸ் தோழர்கள், ஆதரவாளர்களினால் இக் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு, வீரமக்கள் தினத்தை கௌரவிக்கும் முகமாக உணவுப் பொதிகள் குறித்த “கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்து” பிள்ளைகளிடம் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது. சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வு, மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களுக்கான நிதிப் பங்களிப்பை சுவிஸில் உள்ள கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வழங்கியிருந்தனர்.

இதன்படி வரதன், செல்வபாலன், பாபு, ரமணன், அசோக், சூரிச் குமார், சூரிச் ஜெகன், ஆனந்தன், குழந்தை, ஒபேர்புர்க் குமார், ரஞ்சன் ஆகியோர் இவ்வுதவியை வழங்கியிருந்தனர். நேற்று 13.08.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேற்படி நிகழ்வில், உணவுப் பொதிகள் தோழர் சூரி அவர்களினால், கிளிநொச்சி சக்தி இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.