மட்டக்களப்பு கல்வியங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ரிஸ்வான், உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தலை, உடற்பாகங்கள், கல்வியங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு, பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களைத் திரட்டி போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக, மட்டக்களப்பு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேரும், தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் தலை, உடற்பாகங்களை மீளவும் தோண்டியெடுக்க வேண்டுமென, மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் இடங்களில் அவற்றை புதைக்க முடியாதெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீளவும் அவற்றை வைத்தியசாலையில் வைக்குமாறும் ஏற்கெனவே வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், அரச செலவில் உகந்த இடத்தில் மக்களுக்கு பாதிப்பற்ற இடத்தில் புதைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்து மயானத்தில் புதைக்குமாறு தம்மால் உத்தரவிடப்படவில்லை எனவும் மட்டக்களப்பு நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.