மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் > இன்று (02) திங்கட்கிழமை பிற்பகல் தோண்டி எடுக்கப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நசார் மொஹமட் ஆசாத் என்பவரின் உடற்பாகங்கள் கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிஸாரால் புதைக்கப்பட்டது.

இதனையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக அதனை தோண்டி அகற்றுமாறும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பில் இடம் பெற்றன.

இந்த விவகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸாரால் மீண்டும் கொண்டு செல்லப்பட்டதையடுத்து நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்களை தோண்டி எடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள், நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.