வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணியில் உள்ள தனியார் தென்னந் தோட்டத்தில் இருந்து நேற்று (13) கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீதியில் காணப்பட்ட இலுக்குப் புல்லுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

தீயானது பரவி வீதியின் அருகிலுள்ள தனியார் காணியினுள் பரவியதனை தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மர்மப் பொருள் ஒன்று தென்படுவதனை கண்டு வாழைச்சேனை பொலிஸார் மற்றும் பிரதேசத்தின் கிராமசேவகர் க. கிருஷ்ணகாந்தன் ஆகியோர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.