2019ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு, நவம்பர் மாதத்திலிருந்து, ஆறாயிரம் ரூபாய் மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

முப்படை, பொலிஸ் சேவையில் இருந்தபோது, காணாமல் போனோர்களின் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கவுள்ளது.

தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சான்றுப்படுத்தும் அறிக்கையை முன் வைக்கும் குடும்பங்கள் இந்த இடைக்கால கொடுப்பனவு பெறத் தகுதி பெறுவர் என, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த சான்று பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் இடைக்கால கொடுப்பனவு வைப்பலிடப்படவுள்ளன.

இழப்பீட்டு காரியாலயத்தால், நஷ்டஈடு, வேறு விதமான கொடுப்பனவுகள் கிடைக்கும் வரை குறித்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரை 656 குடும்பங்கள் இந்த சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.