ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதங்கள் நேற்று (24) வழங்கப்பட்டன.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைவராக செயற்படும் இவ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜபக்ஷ , ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் டபிள்யு.எம்.எம். அதிகாரி, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் சந்ராணி சேனாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ் ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை 3 மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் 6 மாதங்களுக்குள் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட இறுதி அறிக்கை ஆணைக்குழுவின் அனைத்து அங்கத்தவர்களின் கையொப்பத்துடன் கையளிக்கப்படும்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)