சம்பள பிரச்சினை உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து விஷேட தேவையுடைய மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் கடந்த 20 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கிடைத்த வாக்குறுதிக்கு அமைய குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியவர்கள் இன்று போராட்டம் நடக்கும் இடத்திற்கு வருகை தந்ததாக இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அணியின் தலைவர் யூ.டீ.வசந்த தெரிவித்துள்ளார். 

இதன்போது விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகளை நாளை (01) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

இராணுவத்தினருக்கு வழக்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணங்களை தீர்க்கும் விதமான முடிவுடன் திரும்பி வருவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று மதியம் அவ்விடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுத்தினரின் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளார். 

அதனால் நம்பிக்கையுடன் இவ்விடத்தில் இருந்து செல்லுமாறு தெரிவித்த அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விஷேட தேவையுடைய இராணுவ வீரருக்கு இளநீர் வழங்கி இருந்தார். 

எதிர்க்கட்சி தலைவரின் வாக்குறுதியை அடுத்து விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.