ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை தேர்தில் களமிறங்காவிட்டால் இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக அமையும் என்பது விஷேட அம்சமாகும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடுவதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இம்முறை தேர்தலில் அவர் களமிறங்காவிட்டால் இலங்கை வரலாற்றில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் விஷேடமானதாக இருக்கும். காரணம் இதுவரையில் இடம்பெற்றுள்ள தேர்தல்களில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என யாரேனுமொருவர் களமிறங்கியுள்ளார்.

இவர்களே நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களாகவும் கருதப்படுகின்றனர். இவ்வாறு பிரதான தலைவர்கள் களமிறங்காத முதலாவது தேர்தலாக இத்தேர்தல் அமைந்தால் அதுவே விஷேட அம்சமாகும் என்றார் அவர்.