ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலிற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அதில் 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உட்பட 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி பேரணிகள் நடத்தப்பட்டால் நீதிமன்றுக்கு அறிவிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.