புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று இரவு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரவு 8.45 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட ஒரு நேரத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாவும், இந்த வெடிப்பு சம்பவத்தால் அருவக்காலு குப்பைத் திட்டப் பிரிவை அண்மித்த கரைத்தீவு மற்றும் சேராக்குளி ஆகிய கிராமங்களில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மேற்படி இரண்டு கிராமங்களில் வாழும் மக்கள் அச்சமடைந்ததுடன், அந்த பகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அருவக்காலு குப்பைத் திட்டத்தில் முதன் முதலாக மீதென் வாயுவை எடுப்பதற்கான சோதனை நடவடிக்கைகள் நேற்றைய தினம் மேற்கொண்டபோது, அங்கிருக்கும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எவ்விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. குறித்த பகுதியில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் மிகவும் பாதுகாப்பாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். நேற்றைய தினம் கொழும்பில் இருந்து அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவுக்கு குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்த 29 டிப்பர் வண்டிகள் மீண்டும் கொழும்புக்கே திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.