தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும், சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். மலாக்கா மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா பாராளுமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர் அவர்களுள் அடங்குவர். ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சில காலமாகவே கண்காணிக்கப்பட்டு வந்தனர்,’ என தகவல் அறிந்த ஒரு தரப்பு ‘த ஸ்டார்’ செய்தித்தாளிடம் தெரிவித்தது. சிரம்பானில், நெகிரி செம்பிலான் பாராளுமன்ற உறுப்பினர் வியாழக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக அறியப்படுகிறது.