கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜோசப் பீட்டர் ரொபின்ஸன் என்பவரின் வீட்டை கடந்த 12 ஆம் திகதி சோதனையிட்ட போது அங்கிருந்த பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இதன்போது குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரி கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து குறித்த இருவரும் மேலதிக விசாரணைக்காக தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று யாழ் கோண்டாவில், வரணி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.